Friday 21 October 2011

பாதாள உலகமும் பகிரங்க வெறியாட்டமும்
essay பிரிட்டன் அயர்லாந்தை ஆக்கிரமித்த காலப் பகுதியில் பாரம்பரியமாகத் தொன்மை வாய்ந்த கலாசாரத்துடன் வாழ்ந்த அந்த மக்கள் கடுமையாக எதிர்த்துப் போராடினர். ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி கொள்ளப்பட்டபோதும் அவர்களின் போராட்டம் தொடர்ந்து முனைப்படைந்து வந்தது. அந்தப் போராட்டத்தை அடக்க, கொடிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளை அங்கு கொண்டு சென்று சகல வசதிகளும் வழங்கி ஆயுதபாணிகளாக்கிக் குடியேற்றியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் பெண்கள், முதியோர், குழந்தை கள் எனப் பல ஆயிரக்கணக்கான அயர் லாந்து மக்களைக் கொன்று குவித்தனர். எங்கும் காடையரின் காட்டாட்சியே மேலோங்கி நின்றது.
 பிரிட்டன் அயர்லாந்தை ஆக்கிரமித்த காலப் பகுதியில் பாரம்பரியமாகத் தொன்மை வாய்ந்த கலாசாரத்துடன் வாழ்ந்த அந்த மக்கள் கடுமையாக எதிர்த்துப் போராடினர். ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி கொள்ளப்பட்டபோதும் அவர்களின் போராட்டம் தொடர்ந்து முனைப்படைந்து வந்தது. அந்தப் போராட்டத்தை அடக்க,  கொடிய குற்றங்களுக்காக சிறையில்  அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளை அங்கு கொண்டு சென்று சகல வசதிகளும் வழங்கி ஆயுதபாணிகளாக்கிக் குடியேற்றியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் பெண்கள், முதியோர், குழந்தை கள் எனப் பல ஆயிரக்கணக்கான அயர் லாந்து மக்களைக் கொன்று குவித்தனர். எங்கும் காடையரின் காட்டாட்சியே மேலோங்கி நின்றது.
 
ஆனால் ஐரிஷ் மக்களின் போராட்டத்தை அடக்கிவிட முடியவில்லை. சில காலம் பின்னடைவுகளுக்கு முகம் கொடுத்த போதிலும் ஐரிஷ் மக்கள் ஐ.ஆர். ஏ. என்ற விடுதலை அமைப்பின் தலைமையில் கிளர்ந்தெழுந்தனர். "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்லு'' என்ற கோஷத்துடன் களத்தில் இறங்கினர். 350 வருடங்கள் தொடர்ந்து போராடி எவ்வளவோ தியாகங்கள் மத்தியில் அயர்லாந்து விடுதலை பெற்றது.
 
பச்சைப் புலிகளின் அட்டகாசங்கள்
அடக்குமுறையாளர்கள் சமூகக் குற்றவாளிகளைத் தங்கள் அராஜக நடவடிக்கைக்குப் பாவிப்பது இன்று வரை தொடர்ந்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா காலத்தில் ஜே.வி.பியின் போராட்டங்களை அடக்க பச்சைப் புலிகள் என்ற ஒரு பயங்கர அமைப்பு பயன்படுத்தப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. அவர்கள் வீதி வீதியாகச் சிங்கள இளைஞர்களை வெட்டி யும் சுட்டுக் கொன்றதையும் தலைகளை வெட்டி சந்திகளில் வைத்தமையையும் ஆறுகளில் பிரேதங்களை மிதக்கவிட்டமையையும் நாம் மறந்துவிட முடியாது. 
 
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த போது களனி ஆற்றில் தமிழர்களின் சடலங்கள் மிதக்க விடப்பட்டன. இந்த நிலைமை 1995 இற்குப் பின் இலங்கை அரசியலில் தீவிரமடைந்தது. முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்களுக்கென பாதாள உலகக் கோஷ்டிகளை வைத்திருந்து குட்டி அரசுகள் நடத்துமளவுக்கு நிலை மைகள் மோசமடைந்தன. இந்தக் கோஷ்டி களை வழி நடத்த ஏற்கனவே கொள்ளை, கூலிக்குக் கொலை, போதைவஸ்து, வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இராணுவத்திலிருந்து ஓடி வந்தவர் களும்தாராளமாகக் களமிறக்கப்பட்ட னர். இவர்கள் ஒரு துணை இராணுவக் குழுவாகவே இயங்கினர்.அரசியல் கொலைகள், பழிவாங்கல்கள் ஆள்கடத்தல், கப்பம், அரசியல் பேரங்கள், மிரட்டல்கள் எனப் பலவிதமான தேவைகளுக்கும் இவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
 
தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுக்களும் வடக்கு கிழக்கில் அரச சார்பு முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக் களும் இராணுவத்தினர், பொலிஸாரின் துணையுடன் செயற்பட்டு வந்தனர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பேரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து எமது மக்களை வீதி வீதியாகவும் வீட்டு முற்றங்களிலும் கொன்று போட்டவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.
 
இப்படியான ஒரு புறச்சூழலில்தான் கொலன்னாவ தொகுதியின் முல்லேரியா பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் கண் காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் ஜனாதிபதியின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குமான பணிப்பாளருக்குமிடையே இடம்பெற்ற ஆயுத மோதலில் நால்வர் கொல்லப் பட்டனர். பத்துக்கு மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.
 
ஒரே கட்சியில் ஒரே சின்னத்தில் போட்டியிட்ட இருவருக்கிடையேதான் உயிர்ப்பலி கொண்ட இந்த மோதல் இடம்பெற்றது  என்பது இலங்கையில் அரசு பற்றியும் அதன் ஆட்சியாளர்கள் பற்றியும் கேள்வி எழுப்புகிறது. இப் படியான மோதல்களின் அடிப்படை யைப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு தேவையும் எழுகிறது.
 
உச்சம் பெற்றுள்ள வன்முறைகள்
இந்த மோதல் தொடர்பாக மூத்த அரசியல்வாதியும் சிரேஷ்ட அமைச்ச ருமாகிய டியூ.குணசேகர கருத்து வெளி யிட்டபோது ஓர் உண்மையை வெளிப் படையாகவே தெரிவித்திருந்தார். அதாவது அவர் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புடையவர்கள் அரசியலுக்கு வந்தால் இவ்வாறான கொடூரங்கள் அரங்கேறும் எனத் தெரிவித்திருந்தார்.
 
அவரின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையிலேயே மோதலின்போது இடம் பெற்ற சம்பவங்களும் அதன் பின்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.இந்த மோதல் இடம் பெற்ற போதும் அதன் பின்பு சில மணித்தியாலங்களும் அந்தப் பிரதேசம் ஒரு போர்க்களம் போல் காணப்பட்டதாகவும் மக்கள் நாலாபுற மும் சிதறி ஓடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப் பினர் பாரத லக்ஷ்மன் அவரது இரு மெய்ப் பாதுகாவலர்கள் ஆகியோர் ஸ்தலத்திலேயே கொல்லப்படுமளவுக்கும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடையுமளவுக்கும் அங்கு வன்முறை உச்சம் பெற்றிருக்கிறது. அது மட்டு மன்றி முல்லேரியா பகுதி முழுவதுமே பெரும் கொந்தளிப்பான நிலைமையும் காணப்பட்டது.
 
அன்று இரவு கொலன்னாவ பகுதியில் பொலிஸ் ஊரடங்கை அமுல்படுத்த வேண்டிய அளவுக்கும் இராணுவம் களமிறக்க வேண்டிய அளவுக்கும் நிலைமை மோசமாக இருந்துள்ளது. அது மட்டுமன்றி காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயவர்த்தனபுர மருத்துவமனைக்கு பலத்த பொலிஸ் இராணுவப் பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருந்தது. இதிலிருந்து நாம் நிலைமையின் மோசமான தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
 
ஆயுதக் கோஷ்டியின் அப்பட்ட வன்முறைகள்
 
பொலிஸாரால் விடுக்கப்பட்ட, உடனடியான அமுலாகும் வகையிலான சில உத்தரவுகள் அங்கு நடந்த விடயங்களையும் அவற்றின் பின்னணியையும் ஊகிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன.அதாவது முக்கிய பிரமுகர்கள் மெய்ப் பாதுகாவலர்கள் இனி பொலிஸ் சீருடை அணிந்து கடமையில் ஈடுபடவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் பிரமுகர்களின் வாகனங்களை ஆயுதம் தாங்கிய தனி நபர்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 
இதிலிருந்து இதுவரை அரசியல் பிரமுகர்களின் வாகனங்கள், அவற்றுக்கு வழங்கப்படும் சலுகைகள் ஆயுதக் கோஷ்டிகளின் வன்முறை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப் பட்டு வந்தன என்பதும் மெய்ப் பாதுகாவலர்கள் போன்று ஆயுதம் தாங்கிய தனிநபர்கள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து திரிந்துள்ளனர் என்பதும் தெளிவாகவே தெரிய வருகிறது.
இன்னுமொரு வார்த்தையில் சொல்லப் போனால் பாதாள உலகைச் சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகளின் அடியாள்களாகவும் செல்லப் பிள்ளைகளாகவும் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தமையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
 
இவை ஏற்கனவே மக்களால் அறியப்படாதவையல்ல. ஆனால் பொலிஸ் தரப்பின் உத்தரவுகள் மூலம் இவை உறுதி செய்யப்பட்டுள்ளமை தான் இங்கு ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.ஏற்கனவே இந்தப் பாதாள உலகக் குழுக்கள் அரசுக்கு விரோதமான அரசியல் வாதிகள், ஊடகவியலாளர் களைக் கொலை செய்வது கடத்திக் காணாமற் போகச் செய்வது போன்ற விடயங்களில் தாராளமாகவே பயன்படுத்தப்பட்டு வந்தன. சட்டம் இவர்களை நெருங்குவதில்லை. அப்படி இவர்கள் தவிர்க்க முடியாமல் கைது செய்யப்பட்டாலும் உடனடியாகவே பிணையில் செல்ல ஏற்பாடுகள் செய் யப்பட்டுவிடும்.

பொலிஸார் முன்னிலையில் இடம்பெற்ற தாக்குதல்கள்
 
விலைவாசி உயர்வுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய போராட் டம் தாக்கப்பட்டமை, ஜே.வி.பி.மேற் கொண்ட மாணவர் போராட்டங்கள் மீதான தாக்குதல்கள், கட்டுநாயக்காவில் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர் களின் ஆர்ப்பாட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சிரச ஊடக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் என் பனவற்றை இங்கே குறிப்பிடலாம். இந்தச் சம்பவங்களில் பொலிஸார் முன் னிலையிலேயே காடையர்கள் தாக்கு தல்களை மேற்கொண்டனர் அல்லது பொலி ஸாருடன் காடையர்களும் இணைந்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.
 
இதேபோன்று கொழும்பு புறநகர் பகுதியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அனுராத புரத்தில் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முஸ்லிம் தர்க்கா இடிக்கப்பட்டமை, அமைச்சர் மேர்வின் சில்வா நடத்தும் அட்டகாசங்கள் இவை பற்றியெல்லாம் எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய மர்மமனிதர்கள் பிரச்சினை யிலும்கூட எந்த  ஒரு மர்மனிதனும் கைது செய்யப்படவுமில்லை; தண்டிக் கப்படவுமில்லை. ஆனால் யாழ்ப்பாணத் தில் மர்ம மனிதர்களுக்கு எதிராகக் களத்தில் இறங்கிய பொது மக்கள் சுட் டுக் கொல்லப்பட்டனர்; அடித்து நொருக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு நீதி மன்றில் நிறுத்தப்பட்டனர்.
 
ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சியினருக்கு எதிராகவோ, ஊடகவியலாளர்களுக்கு எதிராகவோ பொதுமக்களுக்கு எதிராகவோ நடத்தப்படும் காடைத்தனங்களுக்கு எதிராக முறையான நடவடிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்படவில்லை. அனைத்தும் அரசியல் ரீதியாகவோ அல்லது இன, மதக் கண்ணோட்டத்திலோ அணுகப் பட்டன.
இன்னொரு விதத்தில் சொல்வதானால் சில குறிப்பிட்ட விடயங்களில் காடைத்தனங்களுக்கு மறைமுகமான அனுமதி வழங்கப்பட்டது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படும் வண்ணம் பல சம்பவங்கள் இடம்பெற்றன.
 
அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எழுச்சிபெறும் தொழிலாளர் களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எதிராகப் பாவிக்கப்பட்ட இந்தப் பாதாள உலகக் கும்பல் இன்று ஆளுங்கட்சி யினரே ஒருவரை ஒருவர் கொன்று தள்ளுமளவுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதம் அரசுக்கே தலையிடியாக மாறியதுடன் அரசு சார்ந்த அரசியல்வாதிகளையும் நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டது என்பதுதான் யதார்த்தம்.             

No comments:

Post a Comment